மாவீரனின்அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்

ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது உடல்நலம் காப்பதற்கு அவசியமாகிறது.

1. பசிக்கும் போது உண்ணாமல் இருக்கக்கூடாது. ஆனால் பசிக்காமல் உண்ணவே கூடாது.

2. குறைந்த அளவு உணவையே வாயில் இடவேண்டும்.

3. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவில் கலக்க அவகாசம் கொடுக்க வேண்டும்.

4. வாயில் உள்ள உணவை வயிற்றுக்குள் செலுத்திய பின்னரே மீண்டும் வாய்க்கு உணவை எடுத்துச் செல்ல வேண்டும்.

5. பற்களால் நன்கு அரைத்து உணவை உண்ண வேண்டும். பற்களால் உணவு அரைக்கப்பட்டால்தான் ஜீரணம் முழுமை பெறும். ஒரு மருத்துவர் என்னிடம் கூறும்போது “சோற்றைத் தண்ணீர் போல குடிக்க வேண்டும். தண்ணீரைச் சோறுபோல சாப்பிட வேண்டும்” என்றார். திட உணவைப் பற்களால் நன்கு அரைத்துத் திரவமாக மாற்றி உண்ண வேண்டும்; தண்ணீராக இருந்தாலும் அதை ஒரேயடியாக குடித்து விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

6. காலையில் பழங்கள் மற்றும் பழச்சாற்றை உட்கொண்டு பின்னர் அரைமணி நேரம் கழித்து திட உணவைச் சாப்பிட வேண்டும். மதிய உணவோடு அல்லது இரவு உணவோடு பழங்கள் உண்பதை தவிர்த்துவிடுவது நல்லது. பழங்கள் இரைப்பையில் அரை மணி நேரத்திற்கு மேல் தங்குவதில்லை. (திட உணவுகள் மூன்று மணி முதல் நான்கு மணிநேரம் வரை இரைப்பையில் தங்குகின்றன). அவை நேராகச் சிறுகுடலுக்குச் சென்று ஜீரணமா கிறது. வழக்கமாக நாம் உணவு உண்டவுடன் பழங்களைச் சாப்பிடு கிறோம். வீடுகளில் கூட உணவிற்கு பின்தான் பழம். அப்படி உண்பதால் திட உணவால் தடையுறும் பழம் அங்கு நொதித்து வாயுவை உருவாக்குகிறது. இதனால் ஜீரணம் தடைபடுகிறது.

7. பழம் அல்லது பழரசத்தை சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். ஒரேயடியாக சாப்பிட்டால் பழரசம் வயிற்றில் அமிலத் தன்மையை ஏற்படுத்தி தீமை விளைவிக்கிறது. சிறிது சிறிதாக சாப்பிடுவதால் வயிற்றில் காரத்தன்மையை ஏற் படுத்தி நன்மையை விளைவிக்கிறது.

8. தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துத் தட்டில் வைக்கக் கூடாது. உணவுப் பொருட்களை தட்டில் மீதி வைத்து வீணடிப்பதும் தேசிய இழப்பு என்பதை நிச்சயமாக உணருங்கள். ஒரு நெல் மணியை உற்பத்தி செய்ய ஏழை விவசாயி எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

9. தட்டில் வைத்துவிட்டார்களே என்பதற்காக அனைத்தையும் உண்ண வேண்டிய அவசியம் இல்லை. உணவு அதிகம் என்றால் மீதி வைக்கத் தயங்கக்கூடாது. உணவை வீணாக்கக்கூடாதுதான். ஆனால் வயிறு குப்பைத்தொட்டி அல்லவே.

10. சாப்பிட்டுக்கொண்டே தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. உணவோடு அருந்தும் நீர் ஜீரணிக்கத் தேவையான அமிலங் களை நீர்த்துப் போகச் செய்யும். ஜீரணம் தடைபடும்.

11. உண்பது சுகமே, மறுப்பதற்கில்லை. ஆனால் உணவை ருசித்து அனுபவித்து உண்ண வேண்டும். முழுக் கவனமும் உணவில் இருக்க வேண்டும். உண்ணும் போது கவனம் வேறு பக்கம் திரும்பி விட்டால் உண்ட திருப்தி இருக்காது. உண்ட திருப்தி ஏற்பட மேலும் அதிக உணவு உண்ண வேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் செலவிட வேண்டும். அப்போது முழுக் கவனமும் உணவி லேயே இருக்க வேண்டும். தொலைக் காட்சிப் பெட்டியை மூடி வைத்து விட்டுத்தான் சாப்பிட வேண்டும்.

12. மனக்கவலையைப் போக்குவதற்காக உண்ணாதீர்கள். அதுவே பழக்க மாகிவிடும். மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் மனதை சமாளிக்க இசையைக் கேட்கலாம். ஒரு நல்ல புத்தகம் வாசிக்கலாம். ஏன் ஒரு மணி நேரம் நடக்கலாம். அதை விடுத்து அதிகமாக சாப்பிட்டு கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒருபோதும் ஒளிந்து கொள்ளக் கூடாது.

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா



பாடல் வரிகள்


நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நல்லதோர் வீணை செய்தே



பாடல் வரிகள்


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

நம் எண்ணங்கள் அழகானால்....

உலகம் இயற்கையின் படைப்பு. இவ்வுலகத்தில் எல்லாப் பொருட்களும் நம் கண்களுக்கு அழகாகத்தான் இருக்கின்றன. எல்லா உயிரினங்களும் தன்னளவில் முழுமையாகவே உருவாக்கப்பட்டு அழகாகவே திகழ்கின்றன.

எதுவெல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றதோ அதுவெல்லாம் ஒரு குறைபாடும் இல்லாமல் முழுமையாகவே உருவம் பெற்றிருக்கின்றது. எனவே, முழுமையே அழகு. இதுவே படைப்பின் இலக்கணம். இதுவே வாழ்க்கையைப்பற்றி நம் முன்னோர்களின் பார்வையும்கூட.

இந்த அற்புதப் பார்வையைக் கொண்டு நாம் பார்க்கும்பொழுது உலகத்தில் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன. யாவும் முறையாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

மனிதன் மட்டும் அழகில் ஏற்றத்தாழ்வு கண்டு அசிங்கம் என்ற வார்த்தையைக் கண்டுப்பிடித்திருக்கின்றான். சிலரைக் குரூபி என்று குறைப்படுத்துகின்றான்.

இந்த அழகு மானவுணர்ச்சி மிருகங்களிடையே கிடையாது. ஓர் அழகான, கூர்மையான கொம்புடைய மாடு, ஒரு வளைந்த கொம்புடைய மாட்டைப் பார்த்து முகம் சுளிக்காது. ஒரு சிவப்பு நாய், ஒரு கறுப்பு நாயைப் பார்த்து அவமானப்படுத்தாது. அதனோடு கொஞ்சிக் குலாவுவதை நாம் கண்ணால் பார்த்திருக்கிறோம்.

இந்த அழகு உணர்ச்சியில் அமிழ்ந்து போய்த் தன் இனத்தையே இகழ்ந்த பார்வையோடு பார்ப்பவன் மனிதன் மட்டுமே. சிலர் சிவப்பு அழகு என்று இறுமாந்து இருப்பது, மல்லாந்து படுத்துக்கொண்டு தன் மேலே உமிழ்ந்து கொள்ளும் அவச் செயலுக்குச் சமமாகும். புற அழகை மட்டும் பார்க்கின்ற சில மூடர்கள் இந்தத் தோலை அழகு படுத்துவதுதான் தங்கள் சுயமதிப்பை உயர்த்திக்கொள்ளும் சாதனம் என்று நினைக்கிறார்கள்.

சிந்தனை, சொல், செயல் அழகே மனிதனுக்குப் பேரழகு என்று நமது பெரியோர்கள் சிந்திக்கின்றனர். எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் கனிவாகும். வார்த்தைகள் கனிவாக வந்தால் செயல்கள் சீராக அமையும். அன்பையும் அறிவையும் அணியத் தெரியாதவர்கள்தாம் அணிகலன்களை அணிந்து தங்கள் அசிங்க ஓட்டைகளை அடைக்கப் பார்க்கிறார்கள்.

சமுதாயம் உடல் அழகு உள்ளவர்களை மட்டும் மதிப்பதில்லை. அவர்கள் நடத்தை நேராக இருக்கிறதா? சொற்கள் பணிவாக வருகிறதா? செயல்கள் சீராக இருக்கிறதா? என்று பார்த்துத்தான் ஒரு மனிதனை எடை போடுகிறது. உடல் அழகு மட்டும் நமக்கு உயர்வைத் தருவதில்லை. மன அழகே மாதவம்.

வார்த்தை ஜாலங்கள் புரிபவர்களை யாரும் இரசிப்பதில்லை. வார்த்தைகளால் கொட்டுபவர்களையும் யாரும் விரும்புவதில்லை. வண்ணங்கள் அழகானால் மண்ணுலகம் அழகாகும். எண்ணங்கள் அழகானால் விண்ணுலகம் வியந்து நிற்கும். வார்த்தைகள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும். இது புரியாதவர்கள் மேல் தோலுக்கு என்னதான் சாயம் பூசினாலும் அவர்கள் வெளுக்கமாட்டார்கள். "மனம் வெளுக்க மார்க்கம் மன ஒழுக்கம்" என்கிறார் பாரதியார்.

பணிவுடையன் இன்சொலன் ஆதற் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற குறள் 95

"இனிமையான வார்த்தைகளும் பணிவான நடத்தையுமே ஒருவனுக்கு சிறந்த அணிகலன்கள். அவன் உபயோகிக்கும் அழகுச் சாதனங்கள் அல்ல, " என்கிறார் திருவள்ளுவர். முகத்துக்குச் சாயம் பூசும் மனிதனுக்குச் சில சமயங்களில் மனத்திற்கு வெள்ளை அடிக்கத் தெரிவதில்லை.

அழகு என்பது மன உணர்ச்சி. இதை அழகுச் சாதனங்களால் மெருகு படுத்தமுடியாது. அழகு என்பது எது சதா மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதோ, அது என்கிறான் ஒரு ஆங்கிலக் கவிஞன். கீழான உள்ளக் கிளர்ச்சியோ உடல் தினவோ அல்ல அழகு. கண்ணதாசன் அழகு என்பது உடல்களின் தாளம் அல்ல, ஆத்மாவின் இராகம் என்கிறார்.

இந்த உலகத்தைப் பற்றி நமது ரிஷிகளின் பார்வையோ விசித்திரமாக இருக்கின்றது. இந்த விநோதமான பார்வையைக்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கும்பொழுது இங்கு நம்மைவிட அழகானவர்கள் யாருமே கிடையாது. இந்த உலகத்தைவிட அழகான இடம் எங்குமே இருக்க முடியாது என்ற எண்ணம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நம்மை அறியாமலேயே ஆழமாகப் பதிந்திருக்கின்றது.

அனைத்தும் அழகு. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகம் அழகு. நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாழ்வும் அழகு. நமக்கு ஏற்பட்டிருக்கின்ற உறவுகள் அனைத்தும் அழகு. அழகு! அழகு! அழகைத் தவிர்த்து வேறேதும் இங்கு இல்லை. அனைத்திலும் அழகைப் பார்க்கின்றனர்; பார்த்து ரிஷிகள் கோஷமிடுகிறார்கள். அவர்கள் பார்க்கின்ற அழகு மேலோட்டமான சிவப்பழகு மட்டுமல்ல. கண்களில் படுகின்ற அழகு அனைத்தையும் தாண்டி அதற்குப் பின்னால் ஒளிந்துக்கொண்டிருக்கின்ற கறுப்பழகைக் கண்டனர். இந்த அழகில் கண்ணனைத் தரிசித்தனர். இறைவனே ஒவ்வோர் உயிரிலும் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டனர். மனம் மலர்ந்து ஆராதனை செய்தனர்.

நம்முடைய அனுபவம் மட்டும் என்னவாம்? சற்றே சிந்தித்துப் பாருங்கள். இயற்கையைப் பார்த்தாலே நம்முள் இனம் புரியாத மலர்ச்சி.

ஒரு மரத்தைப் பாருங்கள்...
அது பூத்துக் குலுங்கும்போது நம் உள்ளமும் கூத்தாடவில்லையா?

ஒரு செடியைப் பாருங்கள்...
அது இளம் தளிர்களைத் துளிர்விடும்பொழுது அந்தப் பச்சை வர்ணம் நம்முள் ஒரு பேரமைதியை மலர வைக்கவில்லையா?

ஓர் ஆற்றைப் பாருங்கள்..
அது மிக வேகமாக ஓடிக்கொண்டிருப்பது எதையோ தேடி எந்த ஓய்வும் இன்றி மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருப்பதாகப் படவில்லையா?


இயற்கை அன்னை தினமும் நமக்குப் பாடம் நடத்துகிறாள். நாம்தான் செயற்கையை அள்ளி முகத்தில் அப்பிக்கொண்டு தட்டுத்தடுமாறி நிற்கின்றோம். அப்பியது கண்களில் என்று தெரியாமலா? அல்லது தெரிந்தும் தெரியாமலா?

இருவகை மகிழ்ச்சிகள்


மனிதன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியையே தேடுகிறான். மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் செய்கிறான். அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறான். மகிழ்ச்சியே அவன் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவன் மகிழ்ச்சியின் தேடலில் தன்னை இழந்து விடுகிறானா இல்லை, தன்னை இனம் கண்டு கொள்கிறானா என்பது அவன் தேடும் மகிழ்ச்சியின் தன்மையில் தான் இருக்கிறது.
கௌதம புத்தர் மகிழ்ச்சிகளை இருவகையாகப் பிரிக்கிறார். அதை வைத்தே மனிதன் அந்த மகிழ்ச்சிக்காக செல்ல வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும் என்கிறார். “எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நம் நல்ல குணங்கள் குறைந்து தீய குணங்களும், தீய விளைவுகளும் அதிகரிக்கின்றனவோ அந்த மகிழ்ச்சியை மனிதன் விலக்க வேண்டும். எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நற்குணங்கள் அதிகரித்து நல்ல விளைவுகளும் ஏற்படுகின்றனவோ அந்த மகிழ்ச்சிக்காக மனிதன் முயல வேண்டும்”


ஒரு குறிப்பிட்ட ஓய்வு மாலை நேரத்தில் மூன்று இளைஞர்கள் தனித்தனியாக மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து கோப்பை கோப்பையாக மது அருந்திக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி வாசலில் அமர்ந்து போகிற பெண்களை எல்லாம் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்தாடிக் கொண்டிருக்கிறான். இந்த மூன்று இளைஞர்களுமே நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் தான் இருக்கிறது.


ஆனால் புத்தரின் அளவுகோலை வைத்து மகிழ்ச்சியை எடை போட்டுப் பார்த்தீர்களானால் முதலாமவன் மகிழ்ச்சி அவன் உடலைக் கெடுக்கிறது, இரண்டாமவன் மகிழ்ச்சி அவன் மனதைக் கெடுக்கிறது, மூன்றாமவன் மகிழ்ச்சி அவனுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த ஒரு நாள் மகிழ்ச்சியால் பெரிதாக எந்த விளைவும் வெளியே தெரியாமல் போகலாம். ஆனால் மூன்று பேரும் தொடர்ந்து பல காலம் அந்த மகிழ்ச்சியிலேயே திளைத்தார்கள் என்றால் ஒரு குடிகாரனும், ஒரு போக்கிரியும், ஒரு கால்பந்தாட்ட வீரனும் உருவாகக் கூடும். மகிழ்ச்சியுடன் காலம் கழித்தவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது அந்த மகிழ்ச்சி எப்படி அவர்களுக்கு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து தான்.
ஹெர்மன் ஹெஸ்ஸே என்ற இலக்கியத்திற்காக நோபல் பரிசு வாங்கிய ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய “சித்தார்த்தா” என்ற நாவலின் கதாநாயகனான சித்தார்த்தன் தியான முறைகளையும், பல சூட்சும சித்திகளையும் அறிந்தவன். அவன் ஓரிடத்தில் நண்பன் கோவிந்தனிடம் விளையாட்டாகச் சொல்வான். “ தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசம் இருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன?அகத்தை விட்டுப் பறப்பது தானே! நான் என்ற வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே! உயிர்த் துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கின்ற தன் ஏமாற்றம் தானே! எருதுகள் பூட்டி வண்டியடித்து அலுத்தவனும் இதே வழியைத் தானே பின்பற்றுகிறான். ஏதோ ஒரு விடுதியில் நுழைந்து கொஞ்சம் பனை நீரையோ, புளித்த காடியையோ ஒரு மொந்தை போட்டு விட்டால் எல்லாத் துன்ப நினவுகளையும் அதில் மூழ்கடித்துக் கொண்டு விடுகிறான். அப்போது அவனுக்கு சுய உணர்வு போய் விடுகிறது. உயிர்த் துன்பங்களை அவன் அறிவதில்லை.”


அவன் நண்பன் கோவிந்தன் கூறுவான். “குடி வெறியன் ஏதோ ஆறுதல் பெறுவது சரி தான். சற்று நேர அமைதியும் ஓய்வும் கூட பெறலாம். ஆனால் போதை தெளிந்து பார்க்கும் போது எல்லாம் முன்னிருந்தபடியே அவன் பார்க்க நேரிடும். இதனால் அவன் நுண்ணறிவு பெற்று உயர்ந்து விடுவதில்லை. ஒருபடி கூட மேலேறி விடுவதில்லையே”
வாதத்திற்கு என்று பார்க்கும் போது இருவரும் தன்னிலை மறந்து மகிழ்ச்சி பெறுகிறார்கள் என்றாலும் முடிவில் ஒருவன் தன் பழைய நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்தும், மற்றவன் ஒரு படி தாழ்ந்தும் போகிறது தான் புத்தர் சுட்டிக் காட்டுவதும்.
எனவே மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது வாழ்வின் அர்த்தமும், தேவையும் கூட தான். ஆனால் மகிழ்ச்சியின் தரத்தை மட்டும் அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுங்கள். புத்தர் சொன்னது போல முடிவில் ஏதாவது விதத்தில் நீங்கள் உயர்வதும், பயன் பெறுவதும் மிக முக்கியம். அது தான் உங்கள் மகிழ்ச்சியின் வகையை அளக்க உதவும் சரியான அளவு கோல்.
இன்று அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் நாளைய துக்கத்தின் விதைகளாக இருந்து விட அனுமதிக்காதீர்கள்.


 இன்றைய மகிழ்ச்சிகள் உங்கள் தரத்தை குறைத்து விடவும் அனுமதிக்காதீர்கள். அப்போது தான் உங்கள் மகிழ்ச்சிகள் உண்மையான மகிழ்ச்சிகளாக இருக்கும். அந்த மகிழ்ச்சிகள் நாளையும் நீடிக்கும். நாளை உங்களை பச்சாதாபத்தில் ஆழ்த்தாது.
இது தான் மகிழ்ச்சி என்று ஓரிரண்டை மட்டும் வைத்துக் கொண்டு கடைசியில் அலுப்படைந்து போகாதீர்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் உங்கள் தரம் தாழ்ந்து விடாதீர்கள். உங்கள் திறமைகளை நீட்டிக்கும் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள். வாழ்வின் புதிய புதிய பரிமாணங்களைக் கண்டு களியுங்கள். அந்தப் புதியனவெல்லாம் உங்களைப் புதுப்பிப்பதாகவும், புதிய மைல்கல்களை அடைய வைப்பனவாகவும் இருக்கட்டும்.
ஆறறிவை ஐந்து நான்கு என்று குறைத்து விடும் மகிழ்ச்சிகள் உண்மையில் மகிழ்ச்சிகளே அல்ல. மகிழ்ச்சியின் போர்வையில் உங்களைத் துன்பப் படுகுழியில் வீழ்த்த வரும் தூண்டில்கள் அவை. மகிழ்ச்சியில் ஆழ்ந்து கிடக்கும் தருணங்களில் கூட இந்த உண்மையை மறந்து விடாதீர்கள். தூண்டிலா, ஏணியா என்று மகிழ்ச்சியின் தருணங்களிலும் ஒரு முறை விழிப்புடன் கேட்டுக் கொண்டால் அது உங்களுக்குப் பெரிய பாதுகாப்பாகவும், வாழ்க்கைக்குப் பெரிய வழித்துணையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!

இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.
1. கோபத்தை கட்டுப்படுத்துதல்!
அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.
2. சுவாசம்!
மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.
3. மெதுவாக பேசுங்கள்!
மன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.
4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்!
நீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்!

ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.
6. பசி, உலர்வை தவிருங்கள்!
நிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.
7. தேகநிலை சோதிப்பு (quick posture check)!
இடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.
8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்!
ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்… இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.
அப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்

காதல் கவிதைகள்

1.முத்தம் கேட்டால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?


2துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது 
என் இதயத்திற்கு!

3.மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை

4.மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!

5.விடுதலை பெற்ற பின்னும் 
சிறை செல்ல துடித்தன 
என் உதடுகள்.

6.கண்ணாடி முன் கொட்டிய வார்த்தைகள்
உன் கண்ணைப்பார்த்ததும் உறைந்தது
ஏனோ!

7.என் முடிவு உன் முடிவில் தான்
இருக்கிறது, நீ முடியாத வரை 
நானும் முடிய மாட்டேன்.


8.உன் ஒற்றைப்பார்வையில் 
தொலைத்து விட்டேன்
நான் என்னை!


9.உன்னைப்பிரிவதும் 
உயிரைப்பிரிவதும் 
ஒன்று தான்!


10.உன்னை அழகானவள் என்று 
கூறியதற்காகவா என்னை
அழ வைத்துப்பார்க்கிறாய்!
       

உங்களை உயர்த்தும் உணர்வுகள்


மனதில் எழுகிற உணர்வுகள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை. நமக்கு நன்கு தெரிந்த சராசரி உணர்வுகள்தான். கோபம், அச்சம், சந்தோஷம், பதட்டம், பிரியம் போன்றவற்றையே அதிகம் அனுபவித்திருக்கிறோம்.
இவை மட்டுமில்லாமல், நம்மை உயர்த்தக் கூடிய உன்னதமான உணர்வுகள் நம்மில் அவ்வப்போது எழுகின்றன. அவற்றின் அருமை புரியாமல் கோட்டை விட்டு விடுவதால் அந்த நுட்பமான உணர்வுகளை நாம் வளர்த்தெடுப்ப தில்லை. அவை நாம் வளர்க்க வேண்டிய உணர்வுகள் மட்டுமல்ல. நம்மை வளர்க்கக்கூடிய உணர்வுகளும் கூட…
பரவசம்
இந்த நிலைக்கு நம்மில் பலரும் அடிக்கடி ஆட்படுகிறோம். மனதுக்குள் ஆயிரம் மலர்கள் மலர்ந்து, மேனிசிலிர்க்க கண்கள் நிறைந்து பொங்கும் ஆனந்தத்தில் புதிய உணர்வைப் பெறுவது நமக்கு அடிக்கடி நிகழ்வதுதான்.
தொலைக்காட்சி பார்க்கிறீர்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரோ ஒரு குழந்தை பாடிப் பாராட்டைப் பெறுகிறது. பார்த்துக் கொண்டிருக்கிற உங்களுக்குக் கண்கள் நிறைகின்றன. சிலிர்ப்பு எழுகிறது என்றால் இது மிக நல்ல விஷயம். நல்ல அதிர்வுகள் எங்கே இருந்தாலும் அவற்றைப் பெறுகிற விதமாய் உங்கள் உள்ளம் பக்குவப்பட்டிருக்கிறது. இந்த குணம் வளர்ந்தால் நல்ல விஷயங்கள் உங்களை ஈர்க்கத் தொடங்கும்.
ஆனால், நம்மில் பலர், பிறர்முன் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்துவதையே கூச்சத்துக் குரிய விஷயமாய் நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்குகிறோம். இது பூமியைக் கீறி வெளிவரும் முளையை பலவந்தமாக உள்ளே அழுத்துவது போலத்தான்.
பரவசத்தை உணருங்கள். உணர்த்துங்கள். பரவசமான அனுபவங்களைத் தொடர்ந்து பெறுவீர்கள்.
ஈடுபாடு
உங்களுக்கு ஈடுபாடு இருக்கிற விஷயங்களுக் காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேளுங்கள். இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். “முன்னே எல்லாம் நல்ல மியூசிக் புரோக்ராம்னா ஓடிப்போய் கேட்பேன் சார்! இப்போ எல்லாம் நேரமே இருக்கறதில்லை” என்று ஆதங்கத்தோடு செல்பவரா நீங்கள்? உடனே உங்கள் இசைத் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
எதில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதுதான் உங்கள் எல்லைகள் தாண்டி உங்களை வளர்க்கப் போகிறது. இவ்வளவுதான் நீங்கள் என்று நீங்கள் பொதுவாகவே ஓர் எல்லை வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த எல்லையையும் தாண்டி உங்கள் திறமை, ரசிப்புத்தன்மை, கற்பனை ஆகியவை வளர்வது எப்போது தெரியுமா? உங்களுக்கு ஈடுபாடுள்ள துறையில் நீங்கள் ஆர்வமுடன் பங்கேற்கிற போதுதான்!! உங்கள் ஆர்வம் உரிய முறையில் வெளிப்படும் போதெல்லாம் நீங்கள் உயர்கிறீர்கள்.
நன்றியுணர்வு
ஒரு மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக குணத்தை வெளிப்படுத்தவல்லது நன்றியுணர்வு தான். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்வது நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அல்ல. நம் நலனுக்கு தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு பேர் துணை செய்கிறார்கள் என்பதை உணர்கிறபோதெல்லாம் நாம் மேலும் பலம் பொருந்தியவர்கள் ஆகிறோம்.
எத்தனையோ சம்பவங்களின் கண்ணிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது நம்முடைய வாழ்வு. ஒரு கண்ணி அறுந்தாலும் உயர்வுகள் சாத்தியமில்லை. இந்த நன்றியுணர்வு யாருக்குப் பெருகுகிறதோ, அவர்கள் எடுக்கிற காரியங்கள் எளிதில் நடந்தேறி விடுகின்றன.

நிறைவு- காசி ஆனந்தன் கதைகள்

நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக்கல்லைப்
பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

"எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஓர் கல்தானே...." என்று ஓலமிட்டது.

தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.

'ஏ குறுணி! காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு
பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். 

ஆனால், இரத்தினக்கல் அப்படியா! நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை 
வெளியே தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே
உருவாக்கிக் கொண்டு இருந்தது.

'அப்படியென்றால்...... ?'என்று இழுத்தது குறுணிக்கல்.

கடப்பாறை சொன்னது--

" நிறைவாகும் வரை
மறைவாக இரு"


ஆக்கம் -சாம் கஜன்
புத்தகம்-காசி ஆனந்தன் கதைகள்

முகப்புத்தக விருப்பு