இலங்கையின் இயற்கை அழகு

தென் ஆசியாவின் அழகிய தீவாக அமைந்துள்ள எமது நாட்டில் அழகோ தனி அழகிய வெண்மணல் படர்ந்த கடற்கரைகள் , குளங்கள் ,ஆறுகள் மலை பிரதேசங்கள் அவற்றில் இருந்து வரும் அழகிய நீர்வீழ்ச்சிகள் ,பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் ,காடுகள் ,நீண்ட நெடுபனைகள் தென்னைகள் இது போன்ற இயற்கை அழகுகள் ஏராளம். இவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-( பாடசாலை காலத்தில் சித்திரம் வரைவதில் மிகவும் பாராட்டுப்பெற்ற எனது பாடசாலை சக வகுப்புத்தோழன் சிவனேசன் சயிந்தன் தனது கமராவில் ரசனையுடன் பதிவு செய்து முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இவை நன்றி-சயிந்தன் ).


1.அடர்காட்டிடையே அழகிய நீர்வீழ்ச்சி-ROMBODA WATERFALLS
2.குளக்கரையோர நிமிர்ந்த புற்கள்-சங்கரத்தை, வட்டுக்கோட்டை
3.பனைகளின் பூமி-யாழ்ப்பாணம்-JAFFNA
4.குளக்கரைவலை வீச்சு-செம்மணி -CHEMMANI
5.வயல் மேடையில் மேகக்கூட்ட நடனம் -வெலிகம -WELIGAMA
6.மலைகளில் நடுவில் மனித வசிப்பிடங்கள் -மலையகம்-HILL COUNTRY
7.திருக்கோணேச்சர கடலும் கரையும் -திருக்கோணமலை TRINCOMALEE-பட உதவி-Ratnanathan Ratnavasanthan
8.ஆற்றில் மேகக்கூட்ட குளியல்-நச்சடுவ குளம்-NACHCHADUWA TANK
9.வரட்சியில் செழுமை -செம்மணி -CHEMMANI
10.மழைக்கால வயல்வெளி-வட்டுகோட்டை யாழ்ப்பாணம்-VADDUKKOTTAI ,JAFFNA











வைரமுத்துவின் காதலித்துப்பார்



உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து

கண்ணதாசன் பாடல்கள்



ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

இறைவன்-கலீல்ஜிப்ரானின் கவிதை

முன்னொரு காலத்தில் 
பேச்சின் முதல் தீண்டலை 
என் உதடுகள் தரிசித்த போது 
நான் 
புனித மலையின் மேலேறி நின்று 
இறைவனிடம் சொன்னேன்.. 
"எசமானனே.. நான் உன் அடிமை.. 
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை.. 
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!" 
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல் 
ஒரு பெரும் புயலைப் போல் 
என்னைக் கடந்து சென்றார்.. 

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர் 
நான் 
மீண்டும் புனித மலையில் ஏறி 
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்.. 
"படைத்தவனே.. நான் உன் படைப்பு.. 
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்.. 
நான் உனக்கே உரிமையானவன்..!!" 
இறைவன் மறுமொழி கூறாமல் 
ஆயிரம் சிறகுகள் போல் 
கடந்து மறைந்தார்.. 

இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும் 
புனித மலையில் ஏறி 
நான் மீண்டும் 
இறைவனிடம் சொன்னேன்.. 
"தந்தையே.. நான் உங்கள் மகன்.. 
கருணையினாலும் அன்பினாலும் 
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்.. 
பக்தியினாலும் வழிபாட்டினாலும் 
நான் உங்களை அடைவேன்..!!" 
இறைவன் மறுமொழி கூறாமல் 
மலைச்சாரல் பனிமூட்டம் போல் 
விலகி மறைந்தார்.. 

மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும் 
மீண்டும் புனித மலையில் ஏறி 
நான் இறைவனிடம் சொன்னேன்.. 
"இறைவா.. 
நீயே என் நோக்கம்.. 
நீயே என் நிறைவு.. 
நான் உன்னுடைய நேற்று.. 
நீ என்னுடைய நாளை.. 
நான் பூவுலகில் உன்னுடைய வேர்.. 
நீ வானுலகில் என்னுடைய மலர்.. 
சூரியனின் முகத்தின் முன்னால் 
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!" 

இறைவன் என்னை நோக்கிக் குனிந்து 
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி 
தன்னை நோக்கி வரும் நதியை 
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல் 
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்.. 

மலையிலிருந்து 
நான் கீழே இறங்கி வந்த போது 
இறைவன் எங்கும் நீக்கமற 
நிறைந்திருந்தார்..

வைரமுத்துவின் "தோழிமார் கதை"




ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!

மனிதர்களின் கவனத்தை கவரும் முயற்சி


என்னைச் சுற்றியுள்ள நண்பர்களில் பெரும்பாலோர் எப்படி இந்த சமூகத்தில் சிக்கியுள்ளனர், அவர்களின் மன இயக்கத்தின் ஆணி வேராக இருப்பது எது என்று பார்த்தேன். அது‘கவனத்தை கவரும் முயற்சி ’ என்று தெரிகிறது. அடுத்தவர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற உணர்ச்சியே ஆட்டிப் படைக்கிறது.
தர்க்கம் செய்து, குதர்க்கம் செய்து, கடித்து, ஜோக் சொல்லி, பாடி, அலங்காரம் செய்து, ஒதுங்கி நின்று, கூடி கும்மியடித்து, அடுத்தவரை மட்டம் தட்டி, தன் கதை பேசி, ஊர் வம்பு பேசி, அறிவுத் திறனைக் காட்டி, தனது இயலாமையை பறை சாற்றி, இறுமாப்பு காட்டி, தன் நோயைச் சொல்லி, தன் வலிமையை காட்டி, இப்படி எதையாவது செய்து அடுத்தவரின் கவனத்தைக் கவர வேண்டும். அதுவே உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கிய உணவாக இன்றைய மனிதனுக்கு இருக்கிறது.
தனிமை இதனாலேயே மிரட்டுகிறது. அடுத்தவர் கவனம் இல்லாமல் ஒரு கணமும் வாழ முடியாத மனநோய் பிடித்த ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கியுள்ளோம். அடுத்தவர் கவனம் கிடைக்காத கணத்தில் உடனே போதை தேவைப்படுகிறது. சிகரெட்டில் ஆரம்பித்து, சினிமா, டிவி, மது, இண்டர்நெட், சேட்டிங், மொபைல் அரட்டை, மொபைல் விளையாட்டு என போதை எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் தயாரித்து விற்கப்படுகிறது.
மனிதனின் இந்த வலிமையற்ற நிலையால் இந்த அடுத்தவர் கவனத்தின் போதை இல்லாமல் இருக்கமுடியாத நிலையால், அவன் கலை இலக்கியம், விஞ்ஞானம், படைப்பு என எல்லாவற்றையுமே போதையூட்டிக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்பவனாக இருக்கிறான்.
எல்லாவற்றையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறான் ஒருவன் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு இருக்கும். கத்தியை ஆளை வெட்டவும் பயன்படுத்தலாம், அழகு படுத்தவும் பயன்படுத்தலாம். அது போல இன்றைய மனிதனின் போதைத்தனம் எதையும் போதைக்கு பயன்படுத்தவே தூண்டுகிறது.
பணம் கிடைத்தாலும், பதவி கிடைத்தாலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கிடைத்தாலும், வசதி கிடைத்தாலும் அதை அவன் தன்னை வளர்த்திக் கொள்ளவும் தன்னுணர்வு வரை தன் உணர்வை வளர்த்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ‘கவனிப்பு போதை’ கிடைக்காமல் தனிமை நேர்ந்தால் அதை தவிர்க்கவே பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். அல்லது அந்த கவனிப்பு போதை இன்னும் தலைக்கேற என்ன செய்ய இது நமக்கு உதவும் என யோசிக்கிறான்.
பணம் உள்ளவன் அதை பகிர்ந்து கொள்ளத் தயாரில்லை. கலை உள்ளவன் அதில் கரைந்து புதிய வெளிப்பாடுகளை கொண்டுவர முயற்சிப்பதில்லை. பதவி உள்ளவன் கடமையை நிறைவடைய விரும்புவதில்லை. இன்று யாருமே தனக்கு கிடைத்த வாழ்வை வாழ்ந்து பார்க்கவோ கணத்தில் கரைந்து பார்க்கவோ தயாரில்லை.
அடுத்தவர் கவனம் அதிகம் பெறுவது எப்படி என்று ஆரம்பித்து அது ஏற்படுத்திய இயந்திரத்தனத்தின் கட்டுப்பாட்டில் ஏன் எதற்கு என்று தெரியாமல் தேடியும் நாடியும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் மேலும்.......இது மட்டும் தான் உத்தரவு. இயந்திரத்தனத்தின் கட்டளை.
கணவனிடம் கவனம் கிடைக்காத மனைவி நண்பனை நாடுகிறாள். முதலாளியால் பாராட்டப் படாத வேலையாள் இடம் மாறுகிறான். இன்று எல்லோருக்கும் அடிப்படைத் தேவையாய் இருப்பது அடுத்தவர் கவன போதை. இதை நியாயப் படுத்தும் வளர்க்கும் நம் சமூக அமைப்பை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனால் ஆட்பட்டுவிட்ட இயந்திரத்தனமும்தான்.
இதன் ஆணிவேர் என்ன? எங்கிருந்து பிறந்தது இது?  ஏன் இப்படி நம்மை ஆட்டிப் படைக்கிறது என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
மனிதக் குழந்தை முழு வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தை. இரண்டு காலில் நடக்க ஆரம்பித்த பிறகு கடைசி வரை குழந்தையை சுமக்க மனித உடம்பால் முடியாமல் போயிற்று. மனிதக் குழந்தைக்கு பராமரிப்பு அவசியம். அடுத்தவர் கவனம் இல்லாவிட்டால் மனிதக் குழந்தை இறந்துவிடும். குழந்தை பெறும் விலங்குகளுக்கு குட்டி சிறிது வளர்ந்தபின் தாய்மையுணர்வு மறைந்துவிடுவதைப் போல மனிதனுக்கும் மறைந்துவிட்டால் மனிதக் குழந்தையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
விலங்குகளைப் போல வெறும் உணர்ச்சிகளின் வாழ்க்கை உள்ளவனல்ல மனிதன். முழு வளர்ச்சியடையாமல் பிறப்பதால், பிறந்த பின்தான் தன் வளர்ச்சியை மனிதக் குழந்தை எட்டுகிறது. உணர்ச்சிகளுடன் பிறக்கும் குழந்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிறர் கவனத்தையே நம்ப வேண்டி உள்ளது. ஆக அடிப்படையில் மனிதக் குழந்தை உயிர் வாழ்வதற்கான ஒரு அடிப்படைத் தேவை அடுத்தவர் கவனம். ஆகவே குழந்தை அடுத்தவர் கவனத்திலேயே ஒவ்வொரு கணமும் இருக்க விரும்புகிறது. தனிமை மரணத்தைக் கொண்டு வந்துவிடும் என அலறுகிறது.
இது ஒரு நடைமுறை உண்மை. ஆகவே இதில் தவறில்லை. ஆனால் அந்தக் குழந்தை வளர வளர அதன் உணர்வுகள் கூர்மைப் பட நாம் உதவ வேண்டும். அதன் உடலின், மன இயக்கத்தின் தனித்தன்மையை உணர உதவ வேண்டும். இயற்கை அதன் உடலின் மூலம் இந்த உலகிற்கு கொண்டு வரும் அழகை, கொண்டாட்டத்தை, மலர்ச்சியை, வளர்ச்சியை, மாற்றத்தை அந்தக் குழந்தை உணர்ந்து அதன் உள்ளுணர்வுப்படி வாழ உதவ வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு இயற்கையின் செய்தியாளன். அது வாழ்ந்து மலர வேண்டிய ஒரு விஷயம் அங்குள்ளது. அதைக் கண்டுணர நாம் உதவ வேண்டும்.
மாறாக நாம் என்ன செய்கிறோம் குழந்தைக்கு மேலும் மேலும் அடுத்தவர் கவனம் கவர்வது எப்படி அது எவ்வளவு முக்கியம் என்று கற்றுத் தருகிறோம். பலரின் கவனத்தை அது கவர்ந்தால் பாராட்டுகிறோம். கவனிக்கப்படா விட்டால் இகழ்கிறோம். கவனிப்பு பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய் என்கிறோம். பள்ளிக்குப்போனால் அதுவேதான். பலரின் கவனத்தை ஈர்ப்பவன் தலைவன், அவனுக்குப் பாராட்டு, புகழ். கவனத்தை ஈர்க்க முடியாதவன் உதவாக்கரை. இப்படி மேலும் மேலும் மேலும் இந்த போதையை ஊட்டியே வளர்க்கிறோம் நாம். உடம்பு சரியில்லை என்றால் நிறையப் பேர் வந்து பார்த்து விட்டுப் போக வேண்டுமாம். என்ன மடத்தனம். மருத்துவரும் மருந்துமே உண்மைத் தேவை. ஆனால் அதைவிட நமக்கு இந்த கவனிப்பு போதையே தேவைப்படுகிறது.
மேலும் இந்த கவனம் பெறும் முயற்சியின் அடிப்படையில் இதற்காக போட்டி, பொறாமை, தந்திரம், சூழ்ச்சி, போலித்தனம் எல்லாம் போற்றி வளர்க்கப்படுகிறது. இதுதான் நமது சமூக அமைப்பு.
இந்த கவனிப்பு போதையால் நிகழ்ந்துள்ள மற்றொரு மிகப் பெரிய தீமை என்னவென்றால் இதுவே அன்பு என்று இன்று ஆகி விட்டதுதான். உண்மையான அன்பு மறைந்து போகவும் இது காரணமாகிவிட்டது. நம்மை மதிப்பவர்கள், நமக்கு ஏதாவது என்றால் வந்து பார்ப்பவர்கள்தான் அன்பாய் இருப்பவர்கள். அன்பு என்றால் ஒருவனுக்கு கவனிப்பு போதை தர வேண்டும். அதுவே அன்பு என்று ஆகி விட்டது.
நீங்கள் உங்களது மனைவியை அவர்கள் இயல்புபோல் சுதந்திரமாக இருக்க அனுமதித்துவிட்டு நீங்கள் உங்கள் இயல்புப்படி வாழ்வது தவறு என்று ஆகிவிட்டது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உதவி செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது என்பது போய், மனைவி கணவன் தன்னை மதிப்பதில்லை, தனக்கு கவனிப்புப் போதை தருவதில்லை, தன்னிடம் வம்பு பேசுவதில்லை, தன்னுடன் சண்டை போடுவதில்லை, என்று சொல்வதும் மனைவி அவர்கள் இயல்புப்படி இருந்து கொண்டு கணவனுக்கு தேவையான உதவிகளைச் செய்தாலும் மனைவி தன்னைப் புகழ்வதும், தனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்வதும் தனக்காக உருகுவதும் போன்ற கவனிப்பு போதை சமாசாரங்களே அன்பு என்று கருதப் படுகிறது.
அதிக கவனிப்பு அதிக அன்பு என்று கருதப் படுகிறது. இது இருவருக்கும் தேவைப்படுவதால் இருவரும் கவனிப்பு போதையை பரிமாறிக் கொள்கின்றனர். இது அன்பு அல்ல.
அவசியமான உதவிகள் செய்யலாம். ஆனால் அவரவர்களே செய்து கொள்ளக்கூடியதைக் கூட மற்றவர் செய்து தருவது இந்த போதை ஏற்றும் விஷயம்தானே தவிர, அது அன்பு அல்ல. இந்த கவனிப்புத் தேவை என்ற அம்சம் சிறு குழந்தைக்கு ஒரு அவசியம். ஆனால் அதை நாம் வளர வளர வெட்டிவிடாமல் அந்தக் குழந்தையை அடிமைப்படுத்த இந்த அதிக கவனிப்பை அன்பு என்ற பெயரில் கொடுத்து போதையூட்டி வளர்த்து விடுகிறோம். இந்த போதைக்கு அடிமைப்பட்டுப் போன இன்றைய சமூகம் அன்பை இழந்து நிற்கிறது.
அன்பின் சுவை அறியாமல் போலியான இந்த கவனிப்பு சுவையில் விழுந்து வருந்துபவர்களையே நான் பார்க்கிறேன். கவனிப்பு அதிகமாகும் பக்கம் மனம் சாய்வதால் உறவுகளில் விரிதல், நட்பில் விரிசல், வாழ்க்கையே தடம் புரளுதல் என எல்லாம் நடக்கிறது. இந்த கவனிப்பு போதையை பயன்படுத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஏராளமான தீய பழக்கங்கள் மற்றவர்களால் ஏற்றப்படுகின்றன. இதற்குத் தடுப்புச் சுவர்களும் எழுப்பபடுகின்றன. ஆனால் உண்மையான இயல்பான வழி அதுவல்ல. ஒரு குழந்தைக்கு வளர வளர மற்றவர் கவனிப்பில் நாட்டம் குறைய வேண்டும். மற்றவர் கவனம் தேவை என்பதை தாண்டி அது வளர வேண்டும்.
தனக்காக, தன் தன்மையை வாழ்ந்து அனுபவித்து அது ஆனந்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் கிடைப்பார்கள். இல்லாவிடில் புகழுக்கும் பெருமைக்கும் அலையும் கவனிப்பு போதையில் ஆழ்ந்து கிடக்கும் கும்பலே மிஞ்சும்.
மேலும் தன் தனித்தன்மையில் நிறைவும் சந்தோஷமும் அனுபவிக்காத ஒருவன் தன்னுணர்வுப் பாதைக்கு வர முடியாது. வந்தால் அதுவும் போலியாகவே இருக்கும். தானாக, தன்னைப் போல, தான் எப்படியோ அப்படியே இருப்பதில் உள்ள சுதந்திரத்தையும், நிறைவையும் அனுபவிப்பதே தியானத்தின் ஆரம்பம்.
அதிலிருந்து தான் ஒருவன் உணர்வைக் கூர்மைப் படுத்திக் கொண்டே போய், பிரபஞ்சவுணர்வுகளில் ஒன்றைத் தொட்டுக் கரைகிறான், கலக்கிறான். அந்த அனுபவமே தியானம். தன்னுணர்வு அனுபவம். விழிப்புணர்வு அனுபவம். அதன்பின் அவன் பிரபஞ்சவுணர்வின் பலதில் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் வெளிப்படுத்தும் தனித்தன்மை கொள்கிறான். எதன் மூலம் அவன் தொடர்பு கொண்டானோ அதுவே அவன் வெளிப்பாடாகிறது. இப்படி உடலின் தனிதன்மையில் ஆழ்ந்து அனுபவித்து வாழும் மனிதன் பிரபஞ்சத்தன்மைகளில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தும் ஒரு தனித்தன்மை கொண்டவனைப் மலர்கிறான்.
இந்த மலர்ச்சியே மனிதனின் மகிழ்ச்சியான எதிர்காலம். மாறாக இப்போது வாழும் கவனிப்பு போதை வாழ்வு மேலும் மேலும் மனிதனை அடிமைப்படுத்துவதாய், இயந்திரமயமாக்குவதாய், வலிமையற்றவனாக்குவதாய், தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதைக்கே கொண்டு செல்லும்.
ஆகவே நண்பர்களே
உங்கள் உடல் மன இயக்கங்களை கவனியுங்கள். அதை வாழுங்கள், வளருங்கள்.
பிரபஞ்சவுணர்வு வரை வளருங்கள். அதை வாழ்கையில் இந்த மரணம் ஒரு கட்டுக்கதை, மனம் ஒரு கருவி, வாழ்க்கை ஒரு விளையாட்டு.

உறவு எனும் இனிய உணர்வு




காமம் கடந்து காதலில் வளர்ந்து
உருவாகும்; உறவில்
ஆழம் உண்டு. அன்பு உண்டு.
புரிந்துகொள்ளல் உண்டு. முதிர்ச்சி உண்டு.
தன்னம்பிக்கை இருக்கும் ஆனால் தன்முனைப்பு இருக்காது.
ஒருவருக்கு ஒருவர் தூணையாக இருப்பார்கள்
ஆனால்;. ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க மாட்டார்கள்.
குழந்தைகளைப் போல் விளையாட்டுத்தனம் இருக்கும்
வாலிபம் போல் வீம்பு இருக்காது.
போட்டியிருக்காது. பொறாமையிருக்காது.
மற்றவரை நோக்கிய மதிப்பு இருக்கும்.
காம புணர்வு கலவை இருக்கும் காம வெறி இருக்காது.
இவ்வாறான உறவில் உருவாகும் குழந்தை
உண்ணதமாகவும்  உயர்ந்ததாகவும் பிறக்கும்.

சாதாரணமாக நம் உறவுகள்
ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் உறவாக அமைகின்றது.
ஆனால் தங்கியுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
இதற்கு எங்களது தன்முனைப்பு காரணம்.
இருவரும் அன்பில் வறுமையானவர்கள்.
இதைப் புரிந்தோ ஏற்றோ கொள்வதில்லை.
ஆனால் இருவரும் மற்றவரின் அன்பை பெறுவதற்காக
உறவாகி முயற்சிக்கின்றனர்.
இந்த உறவுகள் முரண்பாட்டில் முடிவடைகின்றன.
இருவரும்  திறந்நத (open) மனதுடன்  இருப்பது
தம்மை தாம் அறிவதற்கு மட்டுமல்ல
மற்றவரையும் அறிவதற்கு வழிவகுக்கின்றது.
ஆனால் நாம் திறந்த மனதுடன் இல்லை. காரணம் பயம்.
உண்மையாகவும் திறந்த மனதுடனும் இருப்பது
நம்மைப் பிரித்துவிடும் என பயப்பிடுகின்றோம்.
ஆகவே பொய்யாக வாழ்கின்றோம். நடிக்கின்றோம்.

ஒருவரைப் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம்.
ஓவ்வொரு தனிமனிதரும் புரியாத ஒரு தொடர்ப்புதிர். ஒரு அதிசயம். புரிந்துகொண்டோம் எனக் கருதினால்
மற்றவரை ஒரு பொருளாக கருதி கொண்டோம்
அந்தளவிற்கு குறைத்துவிட்டோம் என்றே பொருள்படும்.
ஏனனில் பொருட்களை மட்டுமே நாம் புரிந்து அறிந்து கொள்ளமுடியும்.
நம் உறவுகளில் ஒரு பயம் எப்பொழுதும் குடிகொண்டுள்ளது.
காதலன் காதலிக்குப் பயம். காதலி காதலனுக்குப் பயம்.
இரு பயந்தவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் உறவே நமது உறவுகள். சண்டை,சுரண்டல், பயன்படுத்தல், கட்டுப்படுத்தல், ஆதிக்கம் செய்தல், சொத்தாக நினைத்தல் என்ற நிலையிலையே நாம் ஒருவருடன் இணைந்து வாழ்கின்றோம்.

உண்மையான காதல்; உறவில் இருப்பவர்களுக்கு
இறப்பு என்பதே இல்லை.
காதல் இல்லாத உறவில்
ஒவ்வொரு கணமும் இறப்பு.

கணவன் மனைவி இருவரும் எப்பொழுதும் சண்டை
பிடித்துக் கொண்டும் குற்றம் குறை கூறிக்கொண்டும் இருப்பர்.
ஓன்று பிழைத்தால் எப்பொழுதும் மற்றவரை குறை கூறுகின்றோம்.
அவரே காரணம் ,பொறுப்பு என்கின்றோம்.
இது எதிர்கால வளர்ச்சிக்கான
எல்லா விதமான சாத்தியங்களையும் அழிக்கின்றது.
நானே எப்பொழுதும் எதற்கும் பொறுப்பாளர்.
நானே தவறுகள் அனைத்துக்கும் காரணம் என்பதை என்றும்
நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
நம்மை நாம் மாற்ற வேண்டும்.
பிரச்சனைகள் உருவாக்கும் தன்மைகளை
நம்மிலிருந்;து அகற்றவேண்டும்.
சுய மாற்றத்திற்கான வழியே காதல் உறவு.
இது மற்றவரில் பிழை கண்டுபிடிக்காது.
எங்கோ என்னில் பிழையிருக்கின்றது. எனக்கண்டுபிடிக்கும்.
இப் பிழையை அகற்றிவிட முயற்சிக்க வேண்டும்.
இது மிகவும் கஸ்டமான பாதை.
ஏனனில் நம் தன்முனைப்புக்கு எதிரானது.
நம் பெருமையை நோகப்பண்ணும்.
நாம் அதிகாரத்தில் இருக்கமாட்டோம்.
மற்றவரின் ஆதிக்கத்தை ஏற்ப்பதும் அதிகாரம் இல்லாதிருப்பதும்
மிகவும் கஸ்டமாக இருக்கும்.
நம் தன்முனைப்பை அழிக்கும்.
நம் நோக்கமே தன்முனைப்பை அழிப்பது தான்.
காதல் உறவினுடாக இலகுவாக இதை அடையலாம்.
இது இயற்கையான பாதை.

இருவரின் சந்திப்பு திருமணத்தில் முடியக் கூடாது.
நட்புத்தன்மையில் தொடர்ந்தும் இருக்கவேண்டும்.
காதலில் இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை
என்பது தொடர்பாக ஆழ்ந்த புரிதல் இருக்கவேண்டும்.
திருமணம் என்ற பந்தம் என்று மறைகின்றதோ
அன்று ஆணும் பெண்ணும் ஆரோக்கியமானவர்களாக உருவாவார்கள்.
கற்பனை செய்ய முடியாதளவு நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ்வார்கள்.
திருமணம் ஒருவரை ஒருவர் சிறைக் கைதியாக்குகின்றது.
ஏனனில் திருமணம் என்பது ஒரு பொறி.
அகப்பட்டால் வெளிவருவது மிகவும் கஸ்டமான விடயம்.
ஏனனில் திருமணம் ஒரு நிறுவனம்.
இதைப் பாதுகாப்பதற்கு மேலும் பல நிறுவனங்கள்
நம்மைச் சுற்றி காவல் காத்துக்கொண்டு இருக்கின்றன.
வாழ்க்கையை அலுப்பாக்கும் சீரழிக்கும் அமைப்பு முறை இது.
ஒரே மாதியரியான வாழ்வு மீண்டும் மீண்டும் வருகின்றது.

திருமணம் ஆண் பெண் இருவருக்கும் மட்டும் நடைபெறுவதல்ல
இன்பத்திற்கும் துன்பத்திற்க்குமான திருமணமாகும்.
தனியார் சொத்துரிமை ஒப்பந்தம் போன்றது திருமணம்.
இங்கு மனிதர்கள் சொத்து உரிமையாக உடமையாக கொள்ளப்படுகின்றனர்.
ஒரு உறவு காதலை அடிப்படையாக கொண்டு உருவாக வேண்டும்.
ஓப்பந்தங்கள் சட்டங்கள் அடிப்படையில் உருவாகக் கூடாது.
காதல் இருவருக்கு மட்டுமல்ல
எப்பொழுதாவது ஒருவருக்கே இல்லாமல் போகும் பொழுது
அன்புடன் நன்றியுடன் இருவரும் விடைபெற வேண்டும்.
நம் சமூகங்களில் இது சாத்தியமா?

உலகத்திலிருந்து காதல் மறைவதற்கு  திருமணம் வழி செய்துள்ளது.
ஏனனில் திருமணம் காதலுக்கா நடைபெறுவதல்ல
மாறாக பணம், நிதி,குடும்பம், பெருமை, சாஸ்திரம்,
இவ்வாறான முட்டாள் தனங்களுக்காகவும்
மற்றும் அதிகாரபூர்வ காமம் உறவுக்காகவுமே நடைபெறுகின்றது.
இரண்டு இதயங்களுக்கு இதில் ஒரு பங்குமில்லை.
அது கவனத்தில் எடுக்கப்படுவதுமில்லை.

உணர்ச்சிகளும் உணர்வுகளும்
அடக்கப்பட்ட அனைத்து சமூகங்களிலும்
காதல் சாத்தியமில்லை.
மிருக நிலை காமம் மட்டுமே சாத்தியம்.
காதல் நிலைக் காமம் கற்பனையில் மட்டுமே வாழும்.
ஒரே அலைவடிவத்தில் இயங்கும் இருவர் சந்திக்கும் சந்தர்ப்பம்
காதலில் மட்டுமே சாத்தியம்.
இவ்வாறான இருவர் சந்திப்பதற்கு காதலிப்பதற்கு
உறவில் இருப்பதற்கு இணைந்து வாழ்வதற்கு
நம் சமூகங்களிலிருந்து அதரவு கிடைப்பதில்லை.
உண்மையான காதலுக்கு இவர்களின் ஆதரவு
தேவையுமில்லை என்பது வேறுவிடயம்.
உண்மையான காதலர்களோ
ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து
நன்றி உடையவர்களாக இருப்பர்.
இவர்களுக்கு சக்தி அதிகம்.

உறவு என்பது அதியங்களில் (mystery) ஒன்று.
காரணம் இது இருவருக்கு இடையிலானது.
இருவரிலும் தங்கியுள்ளது.
இருவர் சந்திப்பது
இரு உலகங்கள் சந்திப்பது போன்றது.
எப்பொழுது எல்லாம் இருவர் சந்திக்கின்றனரோ
அப்பொழுது எல்லாம்
ஒரு புதிய உலகம் உருவாக்கப்படுகின்றது.
உறவை நாம் உருவாக்கின்றோம்.
பின் இதன் விளைவாக
உறவு நம்மை உருவாக்கின்றது.
இது மிகவும் சாதாரண விடயமல்ல.
மிகவும் சிக்கலானது. 
ஆரம்ப சந்திப்பு மேலோட்டமானது உடலளவிலானது.
இது நட்பை உறவை ஆரம்பிக்கின்றது.
இது நாளுக்கு நாள் நெருக்கமாகி ஆழமாகும் பொழுது
இருவரினதும் மையங்கள் சந்திக்க ஆரம்பிக்கின்றன.
அப்பொழுது காதல் பிறக்கின்றது.
மையங்கள் இணையும் பொழுது காதலில் உயர்கின்றனர்.
இருவர் ஒருவராகின்றனர். பிரிவு என்பது அர்த்தமற்றுப் போகின்றது.
இக் காதலே கடவுள் (godliness) தன்மையாகின்றது.
இப் புதிய தோற்றத்தலாம்
இருவரும் மாற்றமடைகின்றனர் (transform).
தம் நிலையில் உயர்கின்றனர்
என ஓசோ கூறுகின்றார்.

திருமணம்
ஒரு சாதாரண பேசும் வசனம்.
காதல்
ஒரு கவிதை

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான உளவியளாளர் ஓசோ.  உறவுகள் தொடர்பான இவரது பார்வை மிக ஆழமானது, அழகானதும் கூட ..

அலையின் காதல்


வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

தளிர்ப்பு



இலையுதிர்காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
 "உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன..." 
என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது. 


மரம் சொன்னது:-"நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும் 
" நிமிர்ந்தே நின்றது மரம். 
அது சொன்னது:-விழுவதெற்கெல்லாம் 
                             அழுவதற்கில்லை"

செந்தாழம் பூவில்-கண்ணதாசன்



செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன்
கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம்
என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்
போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே
அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான்
உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

விவேகானந்தரின் பொன்மொழிகள்


1.சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.


2.இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

3.யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

4.மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்

5.ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்

6.பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். 

7.பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

8.விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

9.ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்

10.மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்

11.எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

12.மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

13.காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

14.அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

15.துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது

இயற்கை என்றும் இனிமை




மனிதனின் முடிவுகள்


கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை.
 
ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்?இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.
அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான்.
மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர்.

அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான்.
மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது.
 
பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர்.
அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார்.
 
இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர்.
 
அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி –மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.

அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான்.
இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே!கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர்.
 
அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார்.
நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.
 

காதலர் தின சிறப்பு கவிதைகள்

1.எதிர்பார்ப்புகள் அற்ற நெஞ்சங்களின் 
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை 
என்றும் அழிவதில்லை


2.கடலில் விழுந்த மழைத்துளியை 
தேடுவது போல தேடுகின்றேன் 
உன் கண்களின் வழியே என் இதயத்தை...


3.காதல் ஒரு இதயத்தின் மொழி 
இருவரையும் இணைத்து 
ஒருமித்து ஒன்றாக கலக்கச்செய்யும் 
அன்பின் மொழி.


4.நான் உன்னை காதலிக்கிறேன் 
என்ற வார்த்தைக்குள் மட்டும் 
அடங்கிவிடாது எனது காதல் 
மொழியைத்தாண்டிய இதயத்தின் உணர்வு


5.உலகம் இன்னும் உயிர்வாழ்வது 
உன்னிலும் என்னிலும் இருக்கும்
 காதலால் தான் ..

ஆரோக்கிய உணவு (Healthy food)


உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை “ஆரோக்கிய உணவு”.
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?
நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

அன்புடைமை

1.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்
பொருள்-உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்-அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.


3.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு
பொருள்-உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
பொருள்-குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship

5.அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பொருள்-இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று கூறலாம்.
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear

6.அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை.
பொருள்-வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.
பொருள்-அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

8.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.
பொருள்-மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

9.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
பொருள்-நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு
பொருள்-அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

முகப்புத்தக விருப்பு