பெர்னாட்ஷாவின் நகைச்சுவை

1.இவர் வயலின் கலைஞரா?

பெர்னாட்ஷா ஒரு வயலின் கச்சேரியைப் பார்க்கச் சென்றிருந்தார். வயலின் கச்சேரி முடிவில் அதன் பெண் நிர்வாகி ஷாவைப் பார்த்து, "வயலின் கலைஞரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

உடனே ஷா "இவர் எனக்கு பாதரவ்ஸ்கியை (பாதரவ்ஸ்கி இன்னொரு இசைக் கலைஞர்) நினைவூட்டுகிறார்" எனப் பதிலளித்தார்.

வியப்புற்ற அந்த நிர்வாகி "பாதரவ்ஸ்கி ஒரு வயலின் கலைஞர் இல்லையே..." என்றார் சட்டென்று.

அமைதியாக ஷா, "இவரும் தானே!" என்று பதிலளித்தார்.

நிர்வாகி வாயடைத்துப் போனார்.

2.அழகுப் பெண்ணின் வயது

தன் அழகில் கர்வம் கொண்ட பெண் ஒருத்தி பெர்னாட்ஷாவிடம் வந்தாள். "என் வயது என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்." என்றாள்.

ஷா அவளை மேலும் கீழும் பார்த்தார். பின் உன் பற்களைப் பார்த்தால் 18 வயது போல் தெரிகிறது. கூந்தலைப் பார்த்தால் 19 வய்துக்கு மதிப்பிடலாம். தோற்றத்தைப் பார்த்தால் 16 என்றே சொல்லலாம்." என்றார்.

பெருமையில் பூரித்துப் போனாள் அந்தப் பெண். "என் அழகைப் புகழ்ந்ததற்கு நன்றி. சரியான வயதைச் சொல்லுங்களேன்." என்றாள்

உடனே ஷா "இன்னுமா தெரியவில்லை. 18, 19, 16 மூன்றையும் கூட்டிப்பார். 53 வருகிறதல்லவா? அதுதான் உன் சரியான வயது" என்றார்.

அந்தப் பெண் அசடு வழிய நின்றாள்.

3.திருமணம் செய்து கொள்ளலாமா?

பெர்னாட்ஷா மீது விருப்பம் கொண்ட ஒரு அழகிய பெண்மணி அவள் ஒருநாள் அவரிடம் வந்து, "நான் பேரழகி. நீங்கள் அறிவுச் சுரங்கம். நாமிருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை என்னைப் போல் அழகாகவும், தங்களைப் போல அறிவாளியாகவும் இருக்கும்" என்றாள்.

பெர்னாட்ஷா உடனே சொன்னார், "சரி... என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்டதாகக் குழந்தை பிறந்தால் என்னாவது?" என்றார்.

அந்தப் பெண்மணி தலைகுனிந்து நின்றாள்.

4.பஞ்சத்திற்குக் காரணம்?

செஸ்டர்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்திருந்தார். ஷா மிகவும் ஒல்லியாக இருந்தார். செஸ்டர்டன் மிகவும் உடல் பருத்து குண்டாக இருந்தார். 

செஸ்டர்டன், பெர்னாட்ஷாவைப் பார்த்து, "உங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல் இருக்கிறது." என்று கிண்டலாக சொன்னார்.

அதற்கு அமைதியாக, "நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், உங்களைப் பார்த்தால் பஞ்சத்திற்குக் காரணமே நீங்கள்தான் என்று புரிந்து கொள்வார்கள்." என்றார். 

செஸ்டர்டன் அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை.

5.பைத்தியக்காரத்தனமான கேள்வி

பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், "பெர்னாட்ஷா, திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்குப் பெர்னாட்ஷா, "கடவுளுக்கு நன்றி சொல்வேன்" என்றார்.

குழப்பமடைந்த நண்பர், "கடவுளுக்கு நன்றியா? ஏன்?" என்று கேட்டார்.

"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா? அதனால்தான்" என்றார் ஷா அமைதியாக.

அந்த நண்பர் அசந்து போய்விட்டார்.
0 Responses

முகப்புத்தக விருப்பு